Sunday, June 9, 2013

புதிய படிம கண்டுபிடிப்புகள் பரிணாம வளர்ச்சி கோட்பாடுகளை தகர்க்கிறது


Post image for புதிய படிம கண்டுபிடிப்புகள் பரிணாம வளர்ச்சி கோட்பாடுகளை தகர்க்கிறது


CHAD எனும் நாட்டில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட படிம மண்டை ஓடு பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை மறுக்கிறது. டார்வின் கொள்கைகளை பின்பற்றும் விஞ்ஞானிகள் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையை இது ஆட்டங்கான வைத்துள்ளது என்று கூறுகின்றனர். ‘குரங்கிலிருந்து மனிதன் வந்தான்’ எனும் கட்டுக்கதை மீண்டும் ஒருமுறை வீழ்ச்சியடைந்துள்ளது.
மத்திய ஆபிரிக்க நாடான  (CHAD) டில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய படிம மண்டை ஓடு மனிதனின் பரிணாம வளர்ச்சி சம்பந்தமான கோட்பாட்டிற்கு பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. உலக புகழ் பெற்ற விஞ்ஞான பத்திரிக்கைகள் மற்றும் சஞ்சிகைகளில் இதற்கு பெரும் பகுதி ஒதுக்கப்பட்டன. ‘மனிதன் குரங்கு போன்ற ஒரு உயிரினத்திலிருந்து தான் பரிணாம வளர்ச்சியடைந்தான்’; என்ற கடந்த 150 வருடங்களாக டார்வினை பின்பற்றுபவர்களால் பிடிவாமாக கூறப்பட்டுவந்த வாதங்களை இந்த புதிய படிமம் வீழ்த்திவிட்டது. மைகேல் பிரண்ட், என்ற பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த படிமத்திற்கு Sahelanthropus tchadensis என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படிமமானது டார்வினை பின்பற்றுபவர்களை பொருத்தவரையில் கிளி கூன்டிற்குள் பூனையை விட்ட கதையாகிவிட்டது. உலக புகழ்பெற்ற நேச்சர் என்ற சஞ்சிகை இவ்வாறு கூறுகிறது: ‘புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடு மனிதன் சம்பந்தமான எமது கருத்துகளை அழித்து விட கூடும்’;  ஹாவார்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த டேனியல் லிபர்மேன் இவ்வாறு கூறுகிறார்: ‘இந்த கண்டுபிடிப்பின் தாக்கமானது ஒரு சிறிய அணுகுண்டின் தாக்கத்தை போன்றதாகும்’.
இவ்வாறு சொல்ல காரணம் இந்த மண்டை ஓடு சுமார் 7 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அது மேலும் மனிதனை போனற அமைப்பில் உள்ளது. (ஏனெனில் இது வரை பரிணாம வளர்ச்சி ஆதரிப்பவர்கள் சுமார் 5 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த Australopithecus என்றழைக்கப்படும் குரங்கு போன்ற ஒரு உயிரினத்தை மனிதனின் மூதாதைகள் என்று அழைத்து வந்தனர்)
1920 ஆண்டிலிருந்து Australopithecus சில பண்புகள் மனிதனை போன்று இருப்பதால்,; இத்தகைய அழிந்த உயிரினம் மனிதனின் மிக பழமையான மூதாதையர் என்று பரிணாம வளர்ச்சி ஆதரிப்பவர்கள் வாதிட்டு வந்தனர். இந்த ஆய்வை மறுக்க கூடிய பல சான்றுகள் தோன்றியுள்ளன. உதாரணமாக, 1990ம் ஆண்டு நடைபெற்ற Australopithecus ஆராய்ச்சியில் அவர்கள் வாதிட்டதை போன்று அவை மேலாக நடக்கவில்லை என்றும், மாறாக அவை குரங்களை போன்று நடந்தன என்பது தெரியவந்தது.. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட Sahelanthropus tchadensis படிமமானது சுமார் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த குரங்கு போன்ற Australopithecus , உண்மையில் ‘மனிதனை போன்று’ உள்ளது வேறு வகையில் சொல்வதானால், அது பரிணாம கோட்பாட்டை தகர்கிறது
இதில் முக்கியமாக : முன்பு ஒரு காலத்தில் மிகப்பெரும் அளவில் மிகவும் வித்தியாசமான குரங்கினங்கள் வாழ்ந்து அழிந்துள்ளன. இதனுடைய மண்டை ஓடு அல்லது எழும்புகள் மனிதனுடையதை போன்று உள்ளது. இருப்பினும் இவ்வொற்றுமைகளை கொண்டு அவைகளை மனிதனுடன் தொடர்புபடுத்த முடியாது. பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் இத்தகைய அழிந்து போன உயிரினங்களின் மண்டை ஓடுகளை அவர்களது கோட்பாட்டின் அடிப்படையில் அடுக்கி, ‘குரங்கிலிருந்து மனிதன்’ வரையுள்ள ஏணி என்று திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். இருப்பினும் இவைகளை ஆழமாக ஆராய்ந்ததன் விளைவாக, அத்தகைய எந்த ஒரு ஏணியும் கிடையாது என்பதையும், முன்பு ஒரு காலத்தில் வெவ்வேறு வகையான குரங்கினங்கள் வாழ்ந்துள்ளன என்பதையும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் மனிதன் அவனுக்கு பின்னால் எத்தகைய பரிணாம வளர்ச்சியும் இன்றி திடீரென தோன்றினான். வேறு வகையில் சொல்வதானால், அவன் படைக்கப்பட்டான்.
நேச்சர் என்ற பத்திரிக்கையின், 11 ஜுலை 2002 இதழில், John Whitfield  ஜோன் வில்ட்பீல்ட், ‘மிகவும் பழமை வாய்ந்த மனித குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’ என்ற கட்டுரையில், வாஷிங்டன் நகரிலுள்ள வாஷிங்டன் பல்கலைகழகத்தின் மனிதவியல் ஆராய்சியாளர் பேர்னாட் வுட்டின் குறிப்புகளை மேற்கோள்காட்டுகிறார்:
நான் 1963ம் ஆண்டு மருத்துவ கல்லூரிக்கு சென்ற போது மனிதனின் பரிணாம வளர்ச்சி ஏணியை போன்று காட்சியளித்தது. அவர் (பேர்னாட் வுட்) கூறுகிறார் : குரங்கிலிருந்து மனிதன் வரையான மத்திய தரமானவைகளை கொண்டு வளர்ச்சியடைந்து செல்லும் ஏணி, இறுதியானதை தவிர ஏனையவைகள் ஒவ்வொன்றும் குரங்கு போன்றேயுள்ளது.
தற்போது மனிதனின் பரிணாமம் போன்றுள்ளது. நம்மிடம் பண்டைய படிமங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் மற்றயவைகளுடன் எவைகள், எவ்வாறு தொடர்புபட்டுள்ளன. அவ்வாறு ஒன்று இருந்தால், அத்தகைய மனிதனின் மூதாதையர்கள் இன்றும் விவாதிக்கப்படுகிறார்கள். (3) நேச்சர் பத்திரிக்கையின் மூத்த பத்திரிக்கை ஆசிரியரும் ஆராய்சியாளாருமான, ஹென்றி கீ, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட படிமத்தை மிக முக்கியமானவை என்று குறிப்பிடுகிறார். த கார்டியன் என்ற பத்திரிக்கைகளில் வெளியான கட்டுரையில் படிமத்துடனான விவாதம் சம்பந்தமான எழுதுகிறார்:
முடிவு எவ்வாறிருந்த போதிலும், விடுபட்ட தொடர்பு என்ற பழைய சிந்தனை .முட்டாள்தமானது என்பதை மண்டை ஓடு காட்டுகிறது. விடுபட்ட தொடர்பானது, எப்பொழும் ஆட்டங்காணக்கூடியதாகவும், முழுமையாக பாதுகாக்ககூடியதல்ல என்பது இப்போது உணரப்பட்டுள்ளது.
சுருங்க கூறுவதானால், நாம் அடிக்கடி பத்திரிக்கைகளிலும் சஞ்சிகைகளிலும் காணும் ‘குரங்கிலிருந்து மனிதன் வரை நீண்டு செல்லும் பரிணாம ஏணிக்கு’ விஞ்ஞான ரீதியில் எந்த மதிப்பும் கிடையாது. அவை கண்மூடித்தனமாக பரிணாம வளர்ச்சியை ஆதரிக்கும் ஒரு சிறிய குழுவால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரமாகும். இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்ட வேளை, பரிணாம வளர்ச்சிக்கு முரண்படும் ஆதாரங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. 2000ம் ஆண்டு அமெரிக்காவை கலக்கிய (Icons of Evolution: Science or Myth, Why Much of What We Teach About Evolution is Wrong) என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியரான அமெரிக்க உயிரியலாளர் ஜோனதன் வெல்ஸ் பிரச்சார வழிமுறைகளை இவ்வாறு கூறுகிறார்:
மனிதனின் தோற்றம் சம்பந்தமான ஆழமான சந்தேகங்களை பற்றி பொது மக்களுக்கு அரிதாக தெரிவிக்கப்பட்டன. இதற்கு மாறாக, மனிதவியல் ஆராய்சியாளர்களாலேயே ஏற்று கொள்ள முடியாத வேறொவரது கோட்பாட்டின் நவீன வடிவத்தை ஏற்று கொள்ளும் படி நாம் வற்புறுத்தப்பட்டுள்ளோம். அலங்காரமான குகை மனிதன் அல்லது நடிகர்களின் பெரும் அலங்காரங்களை கொண்டு இந்த கோட்பாடு காண்பிக்கப்படுகிறது.
டார்வினின் கட்டுக்கதை தற்போது அழிவின் விளிம்பில் இருக்கிறது. டார்வினின் பிழை, 19ம் நூற்றாண்டின் மூடநம்பிக்கை, விஞ்ஞானத்தின் முன்னேற்றம் காரணமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. விஞ்ஞான உலகம் எல்லாவற்றையும் விட முக்கியமான உண்மையான நாம் வாழும் பிரபஞ்சம், அதிலுள்ளவைகள் அனைத்தையும் இறைவன் தான் படைத்தான் என்ற உண்மையின் பக்கம் விரைந்து வருகிறது.
ஹாருன் யஹ்யா
ஆய்வில் உதவிய நூற்கள்
(1) John Whitfield, “Oldest member of human family found”, Nature, 11 July 2002 (2)D.L. Parsell, “Skull Fossil From Chad Forces Rethinking of Human Origins”, National Geographic News, July 10, 2002 (3) John Whitfield, “Oldest member of human family found”, Nature, 11 July 2002 (4) The Guardian, 11 July 2002 (5) Jonathan Wells, Icons of Evolution: Science or Myth, Why Much of What We Teach About Evolution is Wrong, Washington, DC, Regnery Publishing, 2000, p. 225
©2013, copyright Dharulhuda

Monday, June 3, 2013

கிரிக்கெட்டும் மனித சூதாட்டமும்


எழுதியவர்/பதிந்தவர்/உரை பிற ஆசிரியர்கள்

- காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி

    உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை, பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும், நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
    அல்குர்ஆன் 6:32

விளையாட்டைக்குறிக்கும் SPORT என்ற ஆங்கிலச் சொல்லிற்கு OXFORD அகராதியில் NOT SERIOUSLY (முக்கியத்துவ மில்லாமல்)என்று பொருள் காணப்படுகிறது ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் விளையாடும் வீரர்களும் பார்க்கும் ரசிகர்களும் வெறி கொண்ட வர்களாக இருப்பதைப் பார்க்க முடிகின்றது இன்று உலகமெங்கும் கண்மூடித்தனமாகப் பின்பற்றப்படும் ஒரு விளையாட்டு கிரிக்கெட் ஆகும்.

இங்கிலாந்தில் குளிர் காலத்தில் குளிரைப்போக்கி உடலை சூடேற்றுவதற்காக ஒருவர் ஒரு பொருளைப் போடுவார் அதை மற்றொருவர் தட்டி விளையாடுவார் இது தான் காலப்போக்கில் கிரக்கெட் என்று சொல்லப்படுகிறது. குளிரைப் போக்குவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டு தற்போது முட்டாள் தனமாக சுட்டெரிக்கும் வெயிலில் மட்டை தட்டுகின்ற விளையாட்டாக மாறியிருக்கிறது.

சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் மூதறிஞர் ஒருவர் (ஜார்ஜ் பெர்னாட்ஷா) இவ்வாறு சொன்னார் “11 முட்டாள்கள் விளையாடுவதை 11 ஆயிரம் முட்டாள்கள் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்” என்று. அந்த அளவிற்கு எவ்வித பயனற்ற ஒரு விளையாட்டு தான் கிரக்கெட் என்பது.

பெர்னாட்ஷா கூறியது என்னவோ இன்று நிதர்சனமாக நடந்து கொண்டிருக்கிறது பார்வையாளர் வீதம் 11 ஆயிரம் என்பது இன்று இலட்சம் மடங்காவது அதிகமாகி இருக்கும் அதாவது கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் காட்டுகின்றவர்கள் குறைவுதான். ஆனால் இதை ஒரு சூதாட்டம் போல் வெறியோடு பார்த்துக் கொண்டிருப்பவர்களின் கூட்டத்திற்கு அளவே இல்லை எனலாம் இவ்விளையாட்டை பார்ப்போருக்கு உடல் ஆரோக்கியமோ, பண வரவோ, வேறு எந்தப்பலனுமோ கிடைப்பதில்லை.

ஆடக்கூடியவர்களுக்கும், அவர்களை வைத்து விளம்பரம் செய்யக்கூடியவர்களுக்கும் தான் எல்லாவித பலனும், இலாபமும் ஏற்படுகிறதே தவிர நாட்டிற்கோ, நாட்டு மக்களுக்கோ, அரசாங்கத்திற்கோ எவ்வித பிரயோஜனமும் ஏற்படப்போவதில்லை.

மாறாக வெறியுணர்வு கிரிக்கெட் விளையாட்டின் ரசிகர்களிடத்தில் மிகைத்துக் காணப்படுகிறது இந்தியாவும் பாகிஸ்தானும் ஆடினால் சொல்லவேண்டிய அவசியமேயில்லை இரு நாடுகளுக்கும் இடையில் போர் நடப்பது போலவே சித்தரிக்கப்படுகிறது ஏதாவது ஒரு நாட்டு வீரர்கள் தோற்றுவிட்டால் அவர்களின் ரசிகர்கள் அவர்களை கேவலப்படுத்துவதும் அவர்களின் உருவபொம்மைகளை எரிப்பதும் அவர்களின் இல்லங்களை சேதப்படுத்துவதும் வெறித்தனமாக நடந்து கொண்டிருக்கிறது.

இங்குள்ள சிலர் பாகிஸ்தான் ஜெயித்துவிட்டால்; பட்டாசு வெடிப்பதும் இனிப்பு வழங்குதும் அது போன்று இந்தியா ஜெயித்து விட்டால்; இந்து மத வெறியர்கள் பட்டாசு வெடிப்பதும் இனிப்பு வழங்குதும் வெறித்தனத்தின் உச்சகட்டம் என்று சொல்லலாம்.

மேலும் தங்கள் நாடு தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பிரிவினர் கோவில்களில் பேட், ஸ்டம்பு, பந்து இவைகளை வைத்து பூஜைகள் செய்வதும் மற்றொரு பிரிவினர் தர்ஹாக்களில் பிரார்த்தனை செய்து ஃபாத்திஹா ஓதுவதும் மடத்தனத்தின் எல்லை என்று சொல்லலாம்.

ஓவ்வொரு வருடமும் IPL லில் கிரிக்கெட் வீரர்கள் மனித சூதாட்டத்திற்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு வீரரையும் பல கோடிக்கணக்கில் பல விளம்பர நிறுவனங்களும், பல தொழிலதிபர்களும் ஏலம் எடுப்பதை கண்கூடாகக் கண்டுவருகிறோம்.

கடந்த IPL லில் லலித் மோடி மகா ஊழலில் சிக்கி தற்போது வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்து வருகிறார் என்பது வேதனைக்குறிய விஷயம் கிரிக்கெட் ரசிகர்கள் தான் ஐயோ பாவம்.

உலகக்கோப்பை போட்டிகளில் கூட பல நாடுகளைச் சார்ந்த பல வீரர்கள் மேட்ச் பிக்சிங் என்று சொல்லப்படக்கூடிய சூதாட்டத்தில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபட்டு விளையாட்டிலிருந்தே தூக்கி எறியப்பட்ட தகவல்களை நாம் கேள்விப்படுகிறோம் அதற்கென்று பல சூதாட்டத்தரகர்களும் வேலை செய்வதை நாம் பார்க்கின்றோம்

தற்போது உள்ள HOT NEWS IPL சூதாட்டம்
நடந்து கொண்டிருக்கும் IPL லில் கூட சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் கையும் களவுமாக பிடிபட்டதை கண்கூடாகக் கண்டுவருகிறோம் இன்னும் பல வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் எவ்வாறு சூதாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பதை பத்திரிக்கைள் தொலைக்காட்சி நிறுவனங்கள் தோலுரித்துக் காட்டுகின்றன தங்கள் அணி தான் ஜெயிக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கும் ரசிகர்களுக்கு வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு எதிரணிக்கு அதிக ரன்களை விட்டுக் கொடுத்து ரசிகர்களின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போடுவது எவ்விதத்தில் நியாயம் என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்கவேண்டும் தங்களின் பணங்களை வீணடித்து ஏமாந்து போகிறார்கள் ரசிகர்கள் என்பது தான் உண்மை.

சூதாட்டத்தில் ஈடுபட்ட விரர்களுக்கு கடுமையான தண்டனையும் விளையாட்டிலிருந்தே அப்புறப்படுத்தவேண்டும் எனவும் கண்டனக்கனைகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

இது தெரியாத அப்பாவி ரசிகர்கள் தங்களின் பொண்ணான நேரங்களை வீணடித்து தங்களின் அலுவல்களை விட்டு விட்டு அவர்கள் ஃபோர் சிக்ஸர் அடிக்கும் போது கரங்களைத் தட்டுவதிலும் அவர்களை உற்சாகப்படுத்துவதிலும் கழித்துக் கொண்டிருக்கின்றனர் அதனால் தங்களுக்கு என்ன லாபம் என்பதை சிந்தித்துப் பார்த்தார்களா?

சூதாட்டத்தை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது
சூதாட்டத்தின் மூலம் ஷைத்தான் மக்களுக்கு மத்தியில் பகைமைத் தீயையும் வெறுப்புணர்வையும் தான் உண்டாக்குகிறான் என்பதை சமீபத்திய சூதாட்ட நிகழ்வுகள் நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன.

    ஈமான் கொண்டோரே! மதுபானமும் சூதாட்டமும் கற்சிலைகளை வழிபடுதலும் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும், ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றி யடைவீர்கள்.

    நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம் மதுபானத்தைக் கொண்டும் சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும் வெறுப்பையும் உண்டு பண்ணி அல்;லாஹ்வின் நினைவிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்,எனவே அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ளமாட்டீர்களா?
    அல்குர்ஆன் 5: 90, 91.

ஆபாசத்தின் உச்சகட்டம்
பொதுவாகவே இஸ்லாம் ஆபாசத்தை கடுமையாக எச்சரிக்கை செய்கிறது. ஆபாசம்தான் எல்லாத் தீமைகளுக்கும் ஆணி வேராக இருக்கின்றது அது விளையாட்டிலும் புகுந்து விட்டது என்பது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. குறிப்பாக ஐ பி எல் கிரிக்கெட்டிலும் (சியர்ஸ் கேர்ள்ஸ்) நடன மங்கைகளின் அரை குறை ஆடையோடு ஆடும் நடனங்கள் பார்வையாளர்களை உள்ளம் கூச வைக்கிறது. ஆடை என்பது மானத்தை மறைப்பதாக இருக்கவேண்டும் ஆனால் இன்று மானம் காற்றில் பறக்கிற அளவிற்கு ஆடைகள் இருக்கின்றன .

    ஆதமுடைய மக்களே! மெய்யாகவே நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும் உங்களுக்கு அலங்காரமாகவும் ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதை விட) மேலானது. இது அல்;லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் – (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவீர்களாக. அல்குர்ஆன் 7:26.

பெண்களிடத்தில் இயல்பாகவே இருக்கின்ற வெட்கம், நாணம் அகன்று விட்டது அதனால் தான் இது போன்ற அசிங்கங்கள் ஒழுக்கக் கேடுகள் விளையாட்டிலும் அரங்கேறுகின்றன.

நாணம் என்பது இறைநம்பிக்கையில் ஓரம்சம்
நபி(ஸல்) அவர்கள் (அன்சாரிகளில்) ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் வெட்கப்படுவது தொடர்பாகத் தம் சகோதரரைக் கண்டித்துக் கொண்டிருந்தார். “நீ (அதிகமாக) வெட்கப்படுகிறாய் (இதனால் உனக்கு வரவேண்டிய நன்மைகள் பாதிக்கப்படுகின்றன) வெட்கத்தால் உனக்கு நஷ்டம் தான்” என்பது போல் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது இறைத் தூதர் (ஸல்) அவர்கள், “அவரைவிட்டுவிடு! நாணம் இறை நம்பிக்கையில் அடங்கும்” என்றார்கள்.
புகாரி 6118.

நபி(ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணைவிடவும் அதிகக் கூச்ச சுபாவம் உள்ளவர்களாய் இருந்தார்கள். அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
புகாரி 6119

மக்கள் முந்தைய இறைத்தூதர்களின் (முது) மொழிகளிலிருந்து அடைந்து கொண்ட ஒன்றுதான். “உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்” என்பதும்.” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ மஸ்ஊத் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.
புகாரி 2484,6120.

நேர,கால விரயம்
காலம் பொன் போன்றது என்பார்கள் அது வீணாகக் கழிவது கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் தான் நேரத்தையும் காலத்தையும் வீணாகக் கழிப்பது இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டிருக்கின்ற எந்த முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல. இறைவனிடத்தில் அதற்குப் பதில் சொல்லியே தீர வேண்டும்
உன் ஆயுள், இளமை, ஈட்டிய சம்பாத்தியம், அதை செலவழித்தது, கொடுக்கப்பட்ட அறிவு இவைகளுக்கு நாளை மறுமையில் பதில் சொல்லாத வரை தான் நிற்கும் இடத்தை விட்டும் நகர முடியாது என நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள் (திர்மிதீ)

ஆக நேர காலங்களை நல்ல ஆரோக்கிமான பல பயனுள்ள விளையாட்டுக்களிலும் பல பயனுள்ள வழிகளிலும் கழிக்க முன்வரவேண்டும்.

விளையாட்டு என்பது எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை இஸ்லாம் நமக்கு வரையறுத்துத் தருகிறது
ஓட்டப்பந்தயம், அம்பு எறிதல், மல்யுத்தம், குதிரை ஏற்றம், வாள் வீச்சு போன்ற பல தற்காப்புப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள வலியுறுத்துகிற அதே நேரத்தில் சோம்பேறிகளாக கோழைகளாக இருப்பதை வெறுக்கிறது வீரர்களாக இருக்க வலியுறுத்துகிறது இஸ்லாம்.

விளையாட்டிற்கு முக்கியத்துவமில்லாமல் என்ற பொருள் இருந்தாலும் இஸ்லாம் விளையாட்டை முக்கியத்துவமாகத் தான் பார்க்கிறது.

பலவீனமான மூஃமினை விட பலம் வாய்ந்த மூஃமின் தான் அல்லாஹ்விற்கு பிரியத்திற்குறியவனாகவும் அல்லாஹ்விடத்தில் சிறந்தவனாகவும் இருக்கிறான் என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்).

அன்று ஈத் (பெருநாள்) தினமாக இருந்தது. (ஆப்பிரிக்கக்) கருப்பர்கள் தோல் கேடயத்தாலும் ஈட்டிகளாலும் (வீர விளையாட்டு) விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரிடம் நான் (விளையாட்டைப் பார்க்க அனுமதி) கேட்டிருக்க வேண்டும் அல்லது அவர்களே என்னிடம், “நீ இவர்களுடைய (வீர விiளாயட்டைப்) பார்க்க விரும்புகிறாயா?” என்று கேட்டிருக்க வேண்டும். நான், “ஆம்” என்று பதிலளித்தேன். உடனே, அவர்கள் என் கன்னம் அவர்களின் கன்னத்தின் மீது ஒட்டியபடி இருக்க, என்னைத் தமக்குப் பின்னால் நிற்க வைத்தார்கள். “அர்ஃபிதாவின் மக்களே! (எத்தியோப்பியர்களே!) விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். இறுதியில் நான் (விளையாட்டை நன்கு ரசித்து) சலிப்புற்றுவிட்டபோது, “போதுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க நான், “ஆம், போதும்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் நீ போ!” என்று கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.
புகாரி 2901, 2907, 3530, 5236.

ஒரு பெருநாளின்போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ, நான் கேட்டதற்காகவோ “நீ பார்க்க ஆசைப் படுகிறாயா?” எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்கவைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) “அர்பிதாவன் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்’”

என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்தபோது “உனக்குப் போதுமா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். “அப்படியானால் (உள்ளே) போ!” என்று கூறினார்கள்.ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
புகாரி 950.

பந்தயம் நடத்தப்பட்டிருக்கிறது நபியவர்கள் காலத்தில்
ஒருமுறை நபியவர்களுக்கும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் இடையே ஓட்டப்பந்தயம் நடக்க முதல் முறை அன்னை ஆயிஷா அவர்கள் ஜெயிக்க இரண்டாவது முறை ஆயிஷா அவர்கள் சற்று குண்டானதால் நபியவர்கள் ஜெயித்து விடுகிறார்கள் (ஹதீஸின் கருத்து)

நபி(ஸல்) அவர்களிடம் ‘அள்பா’ என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவரும் அதை முந்த முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக் கூடிய) தாக இருந்தது. அப்போது கிராமவாசி ஒருவர் ஆறு வயதுக்குட்பட்ட ஒட்டகம் ஒன்றின் மீது வந்தார். அது நபி(ஸல்) அவர்களின் ஒட்டகத்தை முந்தியது. இது முஸ்லிம்களுக்கு மனவேதனையை அளித்தது. இதையறிந்தபோது நபி (ஸல்) அவர்கள், “உலகில் உயர்ந்து விடுகிற பொருள் எதுவாயினும் (ஒருநாள்) அதைக் கீழே கொண்டு வருவதே அல்லாஹ்வின் நியதியாகும்” என்று கூறினார்கள். அனஸ் (ரலி) அறிவித்தார்.
புகாரி 2872, 6501.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அவற்றின் (பந்தய) தூரம் ‘சனிய்யத்துல் வதா’ விலிருந்து பனூ ஸுரைக் குலத்தாரின் பள்ளிவாசல் வரை(யுள்ள தொலைவாக) இருந்தது. நானும் இத்தகைய குதிரைகளுக்கிடையேயான பந்தயங்களில் கலந்து கொள்வேன். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
புகாரி 2869.

மெலிய வைக்கப்பட்ட குதிரைகளுக்கான பந்தய தூரம்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்பட்ட (பயிற்சி அளிக்கப்பட்ட) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அவற்றை ‘ஹஃப்யா’ விலிருந்து அனுப்பினார்கள். அவற்றின் (பந்தய) எல்லை ‘சனிய்யத்துல் வதா’வாக இருந்தது”என்று இப்னு உமர்(ரலி) கூறினார்.

நான் (அறிவிப்பாளர்) மூஸா இப்னு உக்பா(ரஹ்) அவர்களிடம், ‘அவ்விரண்டுக்குமிடையே எவ்வளவு தொலைவிலிருந்தது?’ என்று கேட்டேன். அவர், “ஆறு அல்லது ஏழு மைல்கள் தொலைவிலிருந்து” என்று பதிலளித்தார் என (மற்றோர் அறிவிப்பாளரான) அபூ இஸ்ஹாக்(ரஹ்) கூறினார்.
புகாரி 2870.

விளையாட்டில் நோக்கம் இருக்கவேண்டும். எதிரியை வீழ்த்த வேண்டும் வேட்டைப் பிராணியை கொல்லவும் வேண்டும் அதல்லாத உடலுக்கு தீங்கு தருகின்ற பார்வையை பறிக்கின்ற பல்லை உடைக்கின்ற எந்த விளையாட்டையும் இஸ்லாம் தடை செய்கிறது. கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களும் அதுபோன்றதுதான்; அது எதிரியை வீழ்த்தாது வேட்டைப் பிராணியைக் கொல்லாது.

தடைசெய்யப்பட்ட விளையாட்டுக்களைப்பற்றி நபியவர்கள் கூறும் போது பின்வருமாறு கூறுகிறார்கள்

கல்சுண்டு விளையாட்டிற்கு (‘கத்ஃப்’) நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள், “அது வேட்டைப் பிராணியையும் கொல்லாது; எதிரியையும் வீழ்த்தாது. மாறாக, அது கண்ணைப் பறித்து விடும் பல்லை உடைத்துவிடும்” என்றார்கள்.
புகாரி 6220, 255.

நான் சிறு கற்களை எறிந்து (வேட்டையாடிக்) கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன்.அவரிடம், “சிறு கற்களை எறியாதே. ஏனெனில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்” அல்லது “சிறுகற்களை எறிவதை வெறுத்து வந்தார்கள்”. மேலும், நபி அவர்கள் “அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாது; எந்த எதிரியும் வீழ்த்தப்படமாட்டான். மாறாக, அது பல்லை உடைக்கலாம் கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)’என்று கூறினார்கள்” எனக் கூறினேன். அதன் பிறகு ஒரு முறை அதே மனிதர் சிறு கற்களை எறிந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் “சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள்” அல்லது “சிறு கற்கள் எறிவதை வெறுத்தார்கள்” என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால், நீயோ (அதை அலட்சியம் செய்துவிட்டு) சிறு கற்களை எறிகிறாயே? நான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்” என்று சொன்னேன் என்று அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) கூறினார்.
புகாரி 5479.

தங்களைத் தற்காத்துக் கொள்கின்ற எதிரிகளைத் தாக்குகின்ற எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் அதை இஸ்லாம் அங்கீகரிக்கிறது

அல்லாஹ் கூறுகிறான்:
மேலும், அவர்களை எதிர்ப்பதற்காக உங்களால் முடிந்த அளவு வலிமையையும் தயார் நிலையிலுள்ள குதிரைப் படையையும் திரட்டி வையுங்கள். அவற்றின் வாயிலாக, நீங்கள் அல்லாஹ்வின் பகைவர்களையும் உங்கள் பகைவர்களையும் பீதிக்குள்ளாக்கலாம். அல்குர்ஆன் 8:60

பனூ அஸ்லம் குலத்தார் சிலர் அம்பெய்யும் போட்டியில் ஈடுபட்டிருந்த போது நபி(ஸல்)அவர்கள் அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், “இஸ்மாயீலின் சந்ததிகளே! அம்பெய்யுங்கள். ஏனெனில், உங்கள் தந்தை (இஸ்மாயீல் (அலை) அவர்கள்) அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்கள். நீங்கள் அம்பெய்யுங்கள். (போட்டியில்) நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்” என்று கூறினார்கள். உடனே, இரண்டு பிரிவினரில் ஒரு சாரார் அம்பெய்வதை நிறுத்தினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுக்கென்ன ஆயிற்று? ஏன் அம்பெய்யாமலிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “தாங்கள் அவர்களுடன் (எதிர் தரப்பினருடன்) இருக்க, நாங்கள் எப்படி அம்பெய்வோம்?” என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், “அப்படியானால் நான் உங்கள் அனைவருடனும் இருக்கிறேன். நீங்கள் அம்பெய்யுங்கள்” என்று கூறினார்கள்.ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.
புகாரி 2899.

இப்படி ஆபாசம், சூதாட்டம், நேர கால விரயம், போன்றவற்றின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்ற வணக்கவழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்ற கிரிக்கெட் செஸ் போன்ற எந்த விளையாட்டையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது மாறாக அவற்றை தடை செய்கிறது.

இதுபோன்ற விளையாட்டுக்களில் காலத்தை வீணடிக்காமல் பல பயனுள்ள ஆரேக்கியமான மனதுக்கு இதமளிக்கிற மார்க்கத்திற்கு வணக்கவழிபாடுகளுக்கு ஊறுவிளைவிக்காத வீரவிளையாட்டுக்களை தேர்ந்தெடுத்து அதில் கவனம் செலுத்தவேண்டும்.

ஆக்கம்:
காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி,
பேராசிரியர் JFA கல்லூரி (Al- Jamiathul Firdhousiya Arabic College),
இமாம் IRGT பள்ளிவாசல்


©2013, copyright Dharulhuda

மிஃராஜ் (இஸ்ரா) தரும் படிப்பிணைகள்


வழங்குபவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ
இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா
நாள்: மே 26, 2013
ஏற்பாடு: ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா




©2013, copyright Dharulhuda

கைக்கூலியின் விபரீதங்கள்

Post image for கைக்கூலியின் விபரீதங்கள்இஸ்லாமிய சட்ட திட்டங்களின் மேன்மைகளையும், உண்மைகளையும் விஞ்ஞானம் நிரூபித்து வரும் இன்றைய உலகில் அவற்றில் சில சிலவற்றை பின்பற்றுவது கொண்டு முஸ்லிம் அல்லாதார் முன்னேற்றம் காணும் இன்றைய தினத்தில், முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் நமது கொள்கைகளையும் லட்சியங்களையும் விட்டு, மாற்றாரின் கொள்கைகளை மேலாகக் கருதி பின்பற்றுவதின் காரணமாக எல்லாத் துறைகளிலும் வீழ்ச்சியுற்றிருக்கின்றோம் என்பதை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். அவைகளில் ஒன்றுதான் கைக்கூலிப் பழக்கம். நபி ஆதம்(அலை) அவர்களிலிருந்து நபி முஹம்மது(ஸல்) அவர்கள் வரை தோன்றிய நபிமார்கள் அனைவரும் பெண்ணுக்கு மஹர் கொடுத்து மணமுடித்ததாக வரலாறு உண்டே. ஒழிய கைக்கூலி வாங்கி மணமுடித்ததாக வரலாறு இல்லலே இல்லை.
நமது இஸ்லாமிய ஷரீஅத்துச் சட்டமும் பெண்ணுக்கு மஹர் கொடுத்து மணமுடிப்பதையே கடமையாக்கி இருக்கிறது. நபி(ஸல்) அவர்களின் அருமைத் தோழர்களான ஸஹாபாக்களில் யாராவது ஒருவர் அல்லது நபி(ஸல்) அவர்களை முழுக்க முழுக்க பின்பற்றி அல்லாஹ்(ஜல்)வின் அன்பையும் நேசத்தையும் பெற்ற இமாம்கள், வலிமார்கள் இவர்களில் யாராவது ஒருவர், கைக்கூலி வாங்கி மணமுடித்ததாக வரலாறு உண்டா என்றால் இல்லவே இல்லை.
அப்படியானால் நம்முடைய முன்னோர்களில் யாருமே செய்திராத, நமக்குக் காட்டித்தராக ஷரீஅத்துச் சட்டம் அனுமதியாத ஒரு நவீன பழக்கத்தை நாம் பின்பற்றுகிறோமென்றால், அது அந்நியருடைய பழக்கமாகத்தான் இருக்க வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள ஹிந்து சகோதரர்களிடம் இந்தப் பழக்கம் உண்டு. முன்காலத்தில் ஹிந்து மதச் சட்டப்படி தகப்பனுடைய சொத்தில் பெண்ணுக்கு வாரிசு உரிமை இல்லை. ஆகவே திருமண சமயத்தில் கைக்கூலியாகவும், சீராகவும் அந்த பெண்ணுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுப்பது அவர்களின் பழக்கமாகும்;  ஆனால் தகப்பனுடைய சொத்தில் பெண்ணுக்கு பங்கு உண்டு என்று நமது இஸ்லாமிய ஷரீஅத்துச் சட்டம் தெளிவாகக் கூறியிருக்கும் போது, இக்கைக்கூலிப் பழக்கத்தை நாம் பின்பற்ற வேண்டிய அவசியம் என்ன? நபி(ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித் தராத அந்நிய சமூகத்தின் பழக்கமான இக்கைக்கூலி, இன்று நம் சமூகத்தில் வேரூன்றி விட்டதால் ஏற்பட்டுள்ள கெடுதிகள் ஒன்றல்ல. பல; அவைகளில் சிலவற்றை இங்கு குறிப்பிடுவோம்.
ஒரு சமுதாயத்தின் பொருளாதார அபிவிருத்தி அச்சமூகத்தின் ஆண்கள் கையில்தான் தங்கி இருக்கிறது என்றால் அது மிகையாகாது. ஆண்கள் சுறுசுறுப்புள்ளவர்களாகவும், உழைக்கும் ஆர்வமுள்ளவர்களாகவும், ஆற்றலுள்ளவர்களாகவும் இருந்தால் சமூக பொருளாதார நிலை உயரும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இக்கைக் கூலிப் பழக்கமானது நமது ஆண்வர்க்கத்தை முழுச் சோம்பேறிகளாகவும், உழைக்கவே லாயக்கற்றவர்களாகவும் ஆக்கிவிட்டது. “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்பது முதுமொழி. ஆண்களின் இளம் பிராயத்திலேயே உழைக்க வேண்டும். பொருள் தேடவேண்டும் என்ற ஆர்வம் உண்டானால் தான் அவர்கள் வாலிப பருவத்தில் உழைக்கும் ஆற்றலுள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் இக்கைக்கூலி பழக்கத்தால் ஆண்கள் சிறுபிராயத்திலிருந்தே பொறுப்பற்றவர்களாகவும், சோம்பேறிகளாகவும் வளரக் காண்கிறோம்.
பெண் வீட்டாரிடமிருந்து கைக்கூலியாகக் கிடைக்கும் பணத்தை நம்பியே ஆண்கள் இந்த நிலைக்கு ஆளாகிறார்கள். இன்று நடக்கும் பெரும்பாலான திருமணங்களை நோட்டமிட்டால், ஒரு வெட்கக் கேடான நிகழ்ச்சியைக் கண்கூடாகக் காணலாம். கைக்கூலியாகக் கொடுக்கும் ரொக்கத்தையும், கல்யாண செலவுக்காக வேண்டிய பணத்தையும், பெண் வீட்டார் எப்பாடுபட்டாவது, பிச்சை எடுத்தாவது சேகரித்து விடும் வேளையில், உழைக்க அருகதையுள்ளவன் நான் என்று மார்தட்டிக் கொள்ளும் ஆண்கள், வீட்டு ரிப்பேர் வேலை, வெள்ளையடித்தல் தனது கல்யாண உடுப்பு, இதர கல்யாண செலவுகள் அனைத்திற்கும் பெண்வீட்டார் கைக்கூலியாகக் கொடுக்கும் பணத்தை எதிர்பார்க்கும் அவல நிலைதான் அது. அவன் பிறந்த மேனியைத் தவிர இதரவை எல்லாம் இந்தப் பாழும் கைக்கூலிப் பணத்தால் ஆனவைகளே. திருமணம் வரை இப்படி சோம்பேறியாகப் பழகிவிட்ட இவன். திருமணத்திற்குப்பின் உழைப்பாளியாக மாறுவான் என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்று.
இதனால்தான் கட்டிய மனைவியைக் காப்பாற்ற முடியாமல், திருமணம் நடந்த குறுகிய காலத்திலேயே அவள் கொண்டு வந்த நகைகளையும் விற்றுச் சாப்பிட்டுவிட்டு, அவளை தாய்வீட்டுக்குத் துரத்தத் துணிந்துவிடுகிறான். அல்லது அவளது தந்தையோ பாட்டனோ உழைத்துச் சம்பாதித்து வைத்த சொத்தை விற்றுக் காலந்தள்ளுகிறான். இக்கைக்கூலி பழக்கமுள்ள ஊர்களை நோட்டமிட்டால் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சொத்துக்களில் பெரும்பகுதி, முஸ்லிம் அல்லாதாருடைய கைகளுக்கு மாறி இருப்பதைக் கண்கூடாகக் காணலாம். இக்கைக்கூலி பழக்கம் நம் சமூகத்தில் தொடர்ந்து நீடிக்குமானால், நம் சமூகமே பிச்சைக்கார சமூகமாக மாற நேரிடும் என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். விதிவிலக்காக ஒருசிலர் உழைக்க முன்வந்தாலும் கூட அவர்களின் வியாபாரங்களில், விவசாயங்களில், தொழில்களில் அபிவிருத்தியையும் பார்க்க முடிவதில்லை; இதற்குக் காரணம் உண்டு.
எவன் சிருஷ்டிகளிடம் கையேந்துகிறானோ அவனுக்கு கொடுக்கும் வாசலை அல்லாஹ் அடைத்துவிடுகிறான் என்று அல்லாஹ்(ஜல்) அருளியதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இக்கைக்கூலி அதாவது பெண் வீட்டாரிடம் கையேந்திக் கேட்கும் கெளரவப் பிச்சைக் காசைவிட, மலத்தைச் சுமந்து கூலியாகப் பெறும் காசு எத்தனையோ மடங்கு உயர்ந்ததாக இருக்கும். கைக்கூலிப் பிச்சை வாங்கும் நம் சமூக மக்களின் முயற்சிகளில் எப்படி அபிவிருத்தியைக் காணமுடியும்? அல்லாஹ்(ஜல்) தருவான் என்ற நம்பிக்கையில் முயற்சி செய்பவர்களை அவன் வீணாக்குவதுமில்லை; அல்லாஹ்மீது நம்பிக்கை இழந்து படைப்புகளிடம் கையேந்துபவர்களை அவன் உருப்படச் செய்வதுமில்லை. ஆகவே கைக்கூலிப் பிச்சை வாங்கும் மனிதர்களுடைய முயற்சிகளை அல்லாஹ்(ஜல்) உருப்படச் செய்வதில்லை. எந்த அளவு என்றால் கைக்கூலி வாங்குவதற்கு முன் மிகவும் சிறந்த முறையில் நடந்து கொண்டிருக்கும் வியாபாரம் கைக்கூலியாக வாங்கிய பணத்தில், கல்யாண செலவுகள் போக ஒரு சிறிய தொகை வியாபார முதலீட்டில் போய்ச் சேரும். அவ்வளவுதான்! அச்சிறிய தொகை ஏற்கனவே உள்ள பெரிய தொகையையும் அழித்துவிடும். இப்படி ஒட்டாண்டியான பலரை நாம் கண்ணாரப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆகவே கைக்கூலிப் பழக்கம் நம் சமுதாயத்தில் தொடர்ந்து நீடிக்கும் வரை சமூக பொருளாதாரம் நிலை ஒருபோதும் உயரப் போவதில்லை என்பது திண்ணம்.
அடுத்து கைக்கூலி பழக்கம் சமூகப் பண்பாடுகளில் ஏற்படுத்தியுள்ள கெடுதிகளைப் பார்ப்போம்.
சமூகப் பொருளாதார நிலை எப்படி ஆண்கள் கைகளில் தங்கி இருக்கிறதோ, அதே போல் அச்சமூகத்தின் ஒழுக்கப் பண்பாடுகள் பெண்களின் கைகளில் தங்கி இருக்கின்றது. சமூகப் பெண்கள் எப்பொழுது ஒழுக்கமுள்ளவர்களாக, பண்பாடுள்ளவர்களாக, கற்புடையவர்களாகத் திகழ்கிறார்களோ, அப்பொழுதுதான் சமூகத்தின் பண்பாடுகளும் சிறப்புடையதாக இருக்கும். ஆனால் இக்கொடிய கைக்கூலிப் பழக்கம், நம் சமூகப் பெண்களுக்கு மத்தியில் பல ஒழுக்கக் கேடுகளை உண்டாக்கிவிட்டது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண்களில் பலர் தங்கள் கணவன்மார்களால் தங்கள் பிறந்தகங்களுக்கு விரட்டப்பட்டு வாழ்விழந்து வழி தவறுவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இக்கைக்கூலி பழக்கத்தால் அழகிருந்தும், குணமிருந்தும் எல்லாம் இருந்தும், பணம் இல்லாத ஒரே காரணத்தால் திருமணம் செய்து கொடுக்கப்படாது பல வருடங்கள் பல குமர்கள் வீட்டினுள் அடைபட்டிருந்து சீரழிவதையும் நாம் பார்த்துச் சகித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இப் பெண்களின் தவறு அவர்களுடைய குற்றமல்ல. சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு ஆணுடைய குற்றமாகும்.
ஒரு மனிதனை ஒரு அறையில் சில நாட்கள் அடைத்து வைத்துக் கொண்டு, உள்ளே மலம் ஜலம் கழிக்கக்கூடாது என்று சொல்லப்பட்டால் அவன் அதை மீறி மலம் ஜலம் கழிப்பது அவனுடைய குற்றம் என்று எப்படிச் சொல்ல முடியும்? அது நிச்சயமாக அடைத்து வைத்தவனுடைய குற்றமாகத்தான் இருக்க வேண்டும். ஆகவே சமுதாய ஆண்களால் அநியாயஞ் செய்யப்பட்டு பல வருடங்கள் வீட்டினுள் அடைபட்டுக் கிடக்கும் பெண்கள் தவறு செய்கிறார்களென்றால் அதற்கு நாளை அல்லாஹ்(ஜல்)வுடைய சந்நிதானத்தில் ஆண்கள்தான் பதில் சொல்லியாக வேண்டும். அது மாத்திரமல்ல. அநியாயஞ் செய்யப்பட்ட பெண்களின் பதுஆவிற்கும் ஆண்கள் இவ்வுலகிலேயே ஆளாகித்தான் ஆகவேண்டும். ஏனென்றால் அநியாயம் செய்யப்பட்டவர்களுடைய பதுஆவிற்கும் அல்லாஹ்வுக்கும்(ஜல்) இடையில் திரை இல்லை என்பது நபி(ஸல்) அவர்களின் வாக்காகும். ஆண்களால் அனியாயஞ் செய்யப்பட்ட பெண்களின் அவர்களுடைய பெருமூச்சுகளினால் ஏற்படும் அழிவுகளை  இந்தக் கைக்கூலி பழக்கமுள்ள ஊர்களின் அவலநிலைகளை நோட்டமிடுபவர்கள் சமுதாயத்தின் வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
இன்று பெண்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள ஒழுக்கக் கேடுகளை நோக்கும்போது, அன்று நபி(ஸல்) அவர்களுடைய காலத்துக்கு முன் வாழ்ந்த அந்த அய்யா முல்ஜாகிலியா காலத்தின் மக்கள் தங்கள் பெண் மக்களை உயிரோடு புதைத்த கொடுஞ்செயலை நாமும் நெருங்கிவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும் இக்கைக் கூலி பழக்கம் இன்னும் சில காலம் தொடர்ந்து நீடிக்குமானால், கருச்சிதைவை ஆதரிக்கும் இந்திய நாட்டிலிருக்கும் நாம், நமக்குப் பிறக்கும் பொன் மக்களை பிறந்த மாத்திரத்தில் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட துணிந்து விடுவோம் என்பதில் ஐயமில்லை.
K.M.H

©2013, copyright Dharulhuda