ஆழ் கடலுக்குள் உருவாகும் உள் அலைகள் (INTERNAL WAVES)
அல் குர்ஆன் வழியில் அறிவியல்………..
அல்லாஹ் படைத்த இப்பூவுலகில் பெரும்பாகம் கடல் சூழ்ந்த உலகமாக சுமார் 70% நீர் நிரம்பிய கோளமாகவே உள்ளது.மனிதன் விண்ணில் ஏறி நிலவை பிடித்துவிட்டான். ஆனால் அவன் காலடியில் கிடக்கும் கடலின் ஆழத்திற்கு சென்று அதன் அற்புதங்களை அறிய முடியாத நிலையிலே அவன் அறிவு இன்றும் இருக்கின்றது. ஆழ் கடல் மர்மங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.
ஆறாம் நூற்றாண்டில் இறக்கி அருளப்பட்ட அல்குர்ஆனில் ஒரு வசனத்தில் அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு உதாரணமாக ஆழ் கடலின் இருளுக்கு ஒப்பிடுகிறான்.
“ ஆழ் கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதனைப் பார்க்க முடியாது.” —அல் குர்ஆன். 24:40
இவ்வசனத்தின் மூலம் அல்லாஹ் நவீன அறிவியல் உண்மைகளை வெளிப்படுத்துகிறான். பொதுவாக கடலின் மேற்புறத்தில் காற்றின் தாக்கத்தால் அலைகள் உருவாகின்றன. இரவில் சந்திரனின் ஈர்ப்பின் காரணமாகவும் அலைகள் எழும்புகின்றன. இவ்வலைகள் எல்லாம் கடலின் மேற்பரப்பில் நிகழ்பவை.
ஆறாம் நுற்றாண்டில் இறக்கப்பட்ட அல்குர்ஆன் கூறுவது, ஆழ்கடல் அலைகளாலும்,அதற்கு மேல் மற்றொரு அலைகளாகவும் அதற்கும் மேல் மேகத்தாலும் மூடப்பட்டிருப்பதால் சூரிய ஒளி உட்புக முடியாமல் கடல் இருளாக இருக்கின்றது. ஆழ் கடலின் ஆழத்தில் அலைகள் இருப்பது பற்றிய அறிவு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புதான் மனிதன் அறிந்து கொண்டான்.
காற்று ஏதுமின்றி அமைதியான கடற்பரப்பில் கப்பல் நகராதது ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியது. இதன் காரணம் பின்புதான் தெரிந்தது. கடல் நீரானது பல அடுக்கு அடர்த்தி நிலை,வெப்ப நிலை உப்புத்தன்மை மாறுபாடுகளைக் கொண்டது. பனிப்பாறைகள் ( Fiord ) உருகி நன்னீர் சேரும் மேற்பகுதி அடர்த்தி குறைவாகவும் உப்பு அதிகமுள்ள அடிப்புற நீர் அடர்த்தி அதிகமாகவும் இருக்கும். அதிக அடர்த்தியுள்ள கீழேயுள்ள நீரானது சுவர் போன்று கப்பலை தடுக்கிறது. இதை ( Dead Water ) என்று அழைக்கின்றனர்.
சூரிய ஒளி கடலில் பட்டு செங்குத்தாக மேல் நோக்கி திரும்பிச் செல்வதால் ஆழ்கடல் உள் அலைகளின் பிரதி பலிப்பை (Reflected Sunlight or Sunglint) செயற்கை கோள் புகைப்படங்கள் மூலமே காண முடியும். மேலேயுள்ள புகைப்படம் கடந்த ஜனவரி 18, 2013 ல் (International Space Station) சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து கரீபியன் கடற்பகுதியில் எடுக்கப்பட்டது.
கடலின் மேற்பகுதியில் காற்று, மற்றும் நீர் என இரு வெவ்வேறு அடர்த்தியுள்ள ஊடகங்களுக்கு மத்தியில் மேற்புற அலை தோன்றுகிறது. கடலின் ஆழத்தில் வெவ்வேறு அடர்த்தியுள்ள திரவங்களுக்கு மத்தியில் உள் அலைகள் (Internal waves) உருவாகின்றன.
அல்லாஹ் கூறும் இரண்டாவது அறிவியல் உண்மை, கடல் நீரில் ஊடுருவும் சூரிய ஒளியானது ஆழம் செல்லச் செல்ல தடுக்கப்பட்டுவிடும். (கடலுக்குள்ளிருந்து) “அவன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதனைப் பார்க்க முடியாது.” அல் குர்ஆன்.24:40. சூரியனின் வெண்மை ஒளியானது பல அலைநீளம் உள்ள வண்ணங்களின் கலவையே.
கடல் இருள் மயமாவதற்ககு காரணம் சூரிய ஒளியானது முதலில் மேகத்தால் தடுக்கப்படுகிறது. அதிலிருந்து தப்பி வரும் ஒளியை கடலின் மேற்புற அலைகள் தடுத்து விடுகின்றன. இன்னும் ஊடுருவிச் செல்லும் ஒளிகளை இருவித அடர்த்தியால் ஊருவாகும் உள் அலைகள் (Internal Gravity Waves) தடுத்து, கடலை இருளாக்கி விடுகின்றன. சூரிய ஒளியில்,

44.5%———-1மீட்டர் அல்லது 3.3 அடி ஆழமே செல்லும்.
22.5%———-10 மீட்டர் அல்லது 33 அடி ஆழமே செல்லும்.
0.53%———-100 மீட்டர் அல்லது 330 அடி ஆழமே செல்லும்.
0.0062%——-200 மீட்டர் அல்லது 660 அடி ஆழம் வரையில் செல்லும்.
200-300 மீட்டர் ஆழத்திற்கு கீழ் முழுக் கடலும் இருள்மயமாகவே இருக்கும். இன்று ஆழ் கடலில் ஆக்சிஜன் வாயுவுடன் (SCUBA) மூழ்கிச் செல்பவர் தன் கையை நீட்டினாலும் ஒளி இல்லாததால் பார்க்க முடியாது.
ஒளி அலைக்கும் கடல் அலைக்கும் உள்ள தொடர்பு.
அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற மாஸாசூட்செட்ஸ் தொழில் நுட்ப கழகத்தின் ( MIT-Experimental and Nonlinear Dynamics Lab) ஆய்வகத்தில், பேராசிரியர் தாமஸ் பீகாக் தலைமையில் ஆழ் கடலில் எவ்வாறு உள் அலைகள் உருவாகின்றன, இதற்கும் ஒளிக்கும் உள்ள தொடர்பை ஆய்வு செய்தனர்.
அதன் முடிவில், “ஆழ் கடலின் உள்ளே உருவாகும் அலைகளுக்கும், ஒளி ஊடுருவி செல்வதற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும், ஒளியானது பல வகை அடர்த்தியுள்ள கண்ணாடி ஊடகத்தில் (Optical interferometers) செல்லும்போது ஒளியை தடுத்தும் சில அலை நீளங்களை கடத்தவும் செய்வதுபோல் கடலில் உருவாகும் உள் அலைகளும் (Internal Waves) வெவ்வேறு அடர்த்தியுள்ள கண்ணாடி ஊடகம் போல் செயல் படுகிறது. கடலடி அலைகளுக்கும் ஒளி ஊடுருவலுக்கும் உள்ள தொடர்பை தற்போதுதான் முதன் முறையாக கண்டுபிடித்துள்ளோம். இன்னும் விரிவாக ஆராய வேண்டியுள்ளது.”என்று அறிவித்தார்.
More information: Paper: prl.aps.org/abstract/PRL/v104/i11/e118501 Provided byMassachusetts Institute of Technology
http://phys.org/news191657531.html
இன்று அமெரிக்கா ஆய்வாளர்கள் கண்டுபிடித்து அறிவித்த கடல் உள் அலைக்கும், ஒளி அலைக்கும் இடையில் உள்ள தொடர்பு, இந்த உண்மையை அல்லாஹ் 6 ம் நூற்றாண்டில் வெளிப்படுத்தி விட்டான்.
“….ஆழ் கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது; அதற்க்கு மேல் மற்றொரு அலை; அதற்குமேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்போது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதனைப் பார்க்க முடியாது.” -அல் குர்ஆன்.24:40.
கடலடி நீரின் அடர்த்தி மாறுபாட்டால் உருவாகும் உள் அலைகள், அடர்த்தி மாறுபாடுள்ள கண்ணாடி (Optical interferometer) எவ்வாறு ஒளியை தடுத்து பிரித்து விடுவதுபோல் உள் அலைகள் (Internal Waves) செயல் படுகின்றன. அலையையும், ஒளியையும் இணைத்து ஒரே வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுவது ஓர் அறிவியல் அற்புதம்.
படைத்த இறைவனை மறுக்கும் நிராகரிப்பவர்களை, அல்லாஹ் ஆழ்கடல் இருளுக்கு உவமையாக கூறுகிறான். இதன் காரணம் என்ன என்று சிந்திக்கும்போது, உலகில் மிகச்சிலரே அல்லாஹ்வை இறைவனாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். பெரும்பான்மை மக்கள் மறுப்பவர்களாகவே உள்ளனர். எப்படி எனில்,
இப்பூமியில் நீர், நிலம் அனைத்திலும் உள்ள ஜீவராசிகளில் சுமார் 10% மட்டுமே சூரிய ஒளியை பெறுகின்றன. ஆழ் கடலில் வாழும் சுமார் 90% உயிரினங்கள் இருள் உலகிலே வசிக்கின்றன. ஆகவே நிராகரிக்கும் மக்களை அல்லாஹ் ஆழ் கடல் இருளுக்கு ஒப்பாக்குகின்றான். அல்லாஹ் அறிந்தவன்!
“ நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும்,தெளிவுமுள்ள (திருக்குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.
அல்லாஹ் இதைக்கொண்டு அவனது திருப்பொருத்தத்தைப் பின்பற்றக்கூடிய அனைவரையும் பாதுகாப்புள்ள நேர் வழிகளில் செலுத்துகின்றான்; இன்னும் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் பக்கம் செலுத்துகிறான்; மேலும் அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.” -அல் குர்ஆன்.5:15-17.
எஸ்.ஹலரத் அலி-ஜித்தா.
©2013, copyright Dharulhuda
0 comments :
Post a Comment