(தமிழாக்கம்: அபூ அய்மன்)
லொறன் பூத், பிரபல தொலைக்காட்சி நிருபர் மற்றும் செய்தியாளர், இவர் ஐக்கிய இராஜ்யத்தின் மாஜிப் பிரதமர், டோனி பிளையரின் மனைவியின் தங்கையும் ஆவார். இவர் 2010ல் இஸ்லாத்தில் இணைந்து வல்ல நாயனுக்கு நன்றி செலுத்தினார். இஸ்லாத்திற்கான நீண்ட பயணம் எனும் கலந்துரையாடலில் அவருக்கும் அவர் குடும்பத்திலும் ஏற்பட்ட மனதிற்கிதமான மாற்றங்களும்.
இந்த உன்னதமான முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில், எனக்கு ஒரு மாத காலத்தைச் செலவிட வாய்ப்பளித்த அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
அன்று, ரமழானின் கடைசிப்பகுதி, ரபா என்னும் இடத்திலுள்ள ஒரு அகதி முகாமிற்குள் இருந்த வீட்டுக்குச் சென்று மெதுவாகக் கதவு தட்டி அழைத்தேன். அக்குடும்பத் தலைவி, கூடாரத்தின் நுழைவாயிலில் வந்து, முகம் முழுக்க புன்னகை நிரப்பி வடிவான வாழ்த்துக்களுடன் வரவேற்றார்.
“அஸ்ஸலாமு அலைக்கும்”! என்றார்! அவ்வாழ்த்தும் அதோடு கூடிய செழிப்பான அவரின் முகத்தாலும் அப்பகுதியே பிரகாசமானது. வரவேற்போ ஒரு தாஜ்மஹாலுக்குள் என்னை அழைப்பது போல் உணர வைத்தது. நெகிழ்ந்து போனேன். இக்குடும்பத்துடன் “இப்தாரில்” கலந்து கொண்டேன்.
இக்குடும்பம் இருக்கும் இடமோ காஸா பள்ளத்தாக்கின் அருவருக்கத்தக்க, மிக மட்டமான இடம்! மட்டுமன்றி, உலகத்திலேயே அதிக சனநெரிசலானது! வறுமையிலும் வறுமையானது! வெறுமையும், பொறுமையும் மட்டுமே அக்குடும்பத்திலும், அப்பகுதியிலும் மீதமாய் இருந்தது.
“ரபா”வில் உணவுப் பற்றாக்குறை இருக்கிறதே உங்கள் ரமழான் எப்படி? என வினவினேன்.
“அல்ஹம்துலில்லாஹ்” என்று சிரித்த முகத்தோடு பதில் தந்தார். அவர்கள் நிலை தெரிந்தும் உதவி செய்ய முடியவில்லையே!
என்ற ஆதங்கத்தோடு பதிலுக்கு, என்னால் புன்னகை மட்டுமே கொடுக்க முடிந்தது. இவர்களோடு நானும் தரையில் அமர்ந்து உள்ளவை கொண்டு பசியாறினேன். சிறிதளவு ‘ஹும்முஸ்’ எனும் தொட்டுக்கொள்ளும் கழியும், சில துண்டு ரொட்டிகளுமே இப்தாரக அமைந்தன. இவர்கள் துயர் நிலை கண்டு இதயம் இருண்டு கோபம் மின்னலாய் வந்தது.
மலர்களைப் போன்ற அத்தாயின் குழந்தைகளின் வயிறுகள் பசியாலும், பட்டினியாலும் குழிவாயிருந்தன.
அத்தாயின் முகத்திலும், உடலிலும் பசியின் பதிவுகள் பளிச்சென்று தெரிந்தது. இவ்வனுபவம் என்னை நிலைகுலையச் செய்தது. இறைவனை நிந்தித்தேன். என்ன இறைவனிவன்? என்று சலித்துக்கொண்டேன்.
உண்ண இல்லை! உண்ண இடமும் இல்லை! இரு கைகள் இருந்தும், இருக்கைகள் இல்லை! தூக்கமும் இல்லை! தூங்க இடமும் இல்லை! யஹூதி இவர்களைத் தூங்க விடவுமில்லை! மலிவாக அங்கு எதுவுமே இல்லை, ஆனால்;
யஹூதிக் கொடுமையால் அவர்களின் உயிர்களையும், உடமைகளையும் மலிவாய் ஆயின, யஹூதிகள் என்பதால் மனிதம் பேசுவோர் மௌனம் ஆயினர்.
வெளிஉலகம் தெரிவிக்கப் படாமல், ஒடுக்கப்பட்டு, முடக்கப்பட்டு,
இந்த வாழ்வுக்குப் பழக்கப்பட்டு, வாழ்வா? சாவா? என்பதில் சுதியற்று, அல்லாஹ் ரசூலில் மட்டும் கதி என்றிருந்த இம்மக்களையா இன்னும் இறைவன் பசி பட்டினிக்குள் தள்ளிவிடுகிறான்? என்றெண்ணினேன்.
உலகத்திலேயே ஏழைகளுக்குள் ஏழைகள் இவர்கள், ஒடுக்கப் பட்டவர்களுக்குள் ஒடுக்கப்பட்டவர்கள் இவர்கள். இவர்களுக்கா நோம்பைக் கடமையாக்குவது?
என்று வருந்தினேன். அவ்வலியோடு; முழு மரியாதையுடன் கேட்டேன்,
சகோதரியே! நீங்காளோ பட்டினியில் வாடுகிரீர்கள்! ஏன் உங்கள் இறைவன் உங்களை ரமழானில் இன்னும் பட்டினியில் போடுகிறான்? உதவியற்று இருக்குறீர்கள்!
ஏன் பரிதவிக்க வைக்கிறான்? ஏன் ரமழானில் நோன்பிருக்கிறீர்கள்? சற்று எனக்கு தெளிவு படுத்துங்கள்,
எனக்கேட்டேன்.
ஒரு கைப்பை கூட வாங்க வசதியற்ற, தன் குழந்தைகளுக்கு காலணிகள் கூட வாங்க வருவாயற்ற, குழந்தைகள் சித்திரம் தீட்ட பேனாவோ, பேப்பர்கூட இல்லாத, வறுமையே வாழ்க்கையும், வாழ்க்கையை வெறுமையுமாகவும் கொண்ட, அத்தாய் சொன்னாள்:
சகோதரியே! நாங்கள் ஏழைகளை ஞாபகப்படுத்திகொள்ளவே ரமழானில் நோன்பிருக்கிறோம். என்றார்.
இதைக்கேட்டதும், நிலைதடுமாறினேன்,
எனது அறிவு, அனுபவம், எல்லாம் ஒரு கணப்பொழுதில் செயலிழந்ததை உணர்ந்தேன். அவ்வார்த்தைகள் திறவுகோலாகி என் இதயத்தினுள் சென்று திறந்திராக் கதவைத் திறந்து வைத்தது.
இஸ்லாம் பற்றிய என் கருத்து எப்போதுமே எதிர்மறையாகவே இருந்ததால், இஸ்லாம் எவ்வளவு மகத்துவமானது என்ற எண்ணம் புறம் தள்ளப்பட்டது,
என் கவலையெல்லாம் பாலஸ்தீன மக்களின் துயர் மட்டுமே! அதற்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தம் இல்லை என நானே எனக்கு சமாதானம் செய்து கொண்டேன். இச்சம்பவத்தோடு காஸாவில் இருந்து வெளியேறி லண்டனுக்குச் சென்று விட்டேன்.
அதற்குப்பின் கடந்த வருடம் ரமழான் மாதத்தில் ஒரு பத்திரிக்கையாளராக மீண்டும் ஈரானுக்குச் சென்றேன். அங்கே ஒரு பள்ளிக்குள் நுழைந்தேன், அது பீபி பாத்திமா பள்ளி என்று அழைக்கப்படுகிறது.
இம்மஸ்ஜித் அதிக மக்கள் வந்து போகும் ஒரு சிறப்பிடமாகவும் இருக்கக்கண்டேன்.
வுழூச் செய்தேன் -எனக்கு அது தெரிந்திருந்தது-
தலையை மறைத்துக்கொண்டு எனக்குத்தோன்றிய ஒரு எளிமையான வணக்கத்தை (துஆவை) நிறைவேற்றினேன்.
நான், அல்லாஹ்! என்றே அழைத்தேன். – “இந்தப் பயணத்தை ஏற்படுத்தித் தந்ததற்கு உனக்கு நன்றி செலுத்துகிறேன்”.
அல்லாஹ்!!! “அல்லாஹ் எனக்கு எதையும் தந்துவிடாதே! என்னிடம் எல்லாம் இருக்கிறது.. ஆனால் அல்லாஹ்வே! பாலஸ்தீன மக்களை மட்டும் மறந்துவிடாதே!”
என்று மன்றாடிய பின் தரையில் அமர்ந்து கொண்டேன் அல்லது அமர்த்தப்பட்டேன்.
மஸ்ஜிதுக்குள், அவ்விடம் பெண்கள் தம் குழந்தைகளுக்கு உணவூட்டும் இடமாக இருந்தது. யாத்திரிகர்கள் வந்துபோய்க் கொண்டிருந்தனர்;
ஆனால் நான் அமர்ந்ததும், வார்த்தைகளுக்குள் அடங்காத, இதமான சாந்தி என்மீது பரவப்படுவதை, உணர்ந்து கொண்டிருந்தேன்.
அப்படியான ஒரு சாந்தியையும், அமைதியையும் என் வாழ் நாளில் நான் தெரிந்திருக்கவோ, அனுபவித்திருக்கவோ, இல்லை. என் மன உளைச்சல்கள் உதிர்ந்து, மனதினுள் சாந்தி, பரவிச் சென்று தடவிக்கொண்டிருந்தது..
பருவம் அடைந்ததில் இருந்து நான் அறியா ஒரு நிசப்தம் என் தலைக்குள் நிலைகொண்டதும் அன்றுதான்.... உண்மையான ஆழம்! ஆழம் கடந்த பெருமகிழ்ச்சி! அழகான அமைதி! இந்த இதமான தெய்வீகச் சூழலில் என் மனம் என்னை அதிக நேரம் அமரவைத்தது. மட்டுமன்றி இப்பிரபஞ்சத்தில் எங்கயோ ஓரிடத்தில் எல்லாமே இவ்வழகான இதமான உணர்வோடுதான் இருக்கிறது என, என் உளம் ஊன்றிச் சொன்னது.
இப்படி இருக்கையில் அவ்வந்திப்பகல் முழுவதும் அங்கே வந்த பெண்கள் என்னருகே வந்து என்தோள் தொட்டு “ஐ லவ் யு” என்றார்கள். ஒரு குழந்தையும் ஓடி வந்து, ஈரானியப் பாஷையில் “ஐ லவ் யு” என்றது. உர்ரென்று அம்மழலை வார்த்தைகள் மனதினுள் சென்றது ஆனந்தப் பட்டாம்பூச்சிகள் பரவிப் பறந்தன.
“பள்ளிக்குள் இப்படித்தானா” என, எனது சகநண்பி நாதியாவிடம் கேட்டேன். “அப்படியென்று சொல்வதற்கில்லை”
என்றார். எதோ ஒன்று நடப்பதாக உணர்ந்தேன்.
பள்ளிக்குள்ளேயே இருந்தேன். அன்றிரவு அதிகளவு யாத்திரிகர்களுடன் நானும் தரையில் கண்ணுறங்கினேன்.
மறுநாள் அதிகாலை பஜ்ர் அதான் என்னை எழுப்பியது. எல்லோரும் தொழுதார்கள் நானும் தொழுதேன்.
அதற்குப் பின் வெளியே வந்து தேநீர் பருகினேன். சூரியன் வந்து கொண்டிருந்தது. என்மனத்தினுள்; மிகவும் குறிப்பாக ஒரு எண்ணம் மட்டுமே அலைமோதித் திரிந்தது. அதுவோ;
நான் இந்த மார்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? இல்லையா? அசலாகவும், அழகாகவும் இருக்கிறதே. இஸ்லாம் ஒரு காட்டிமிராண்டித்தனமான மதமாகவே அறிந்திருந்த எனக்கு, அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்தாலும் இஸ்லாத்தை ஏற்க மனம் சங்கடப்பட்டது.
“ஓ! இல்லை! இஸ்லாம்!!! இல்லவே இல்லை!!! தயவுசெய்து இஸ்லாம் இல்லை”!!! என்ற எண்ணம் முட்டிமோதிற்று. அதற்குப்பின் எனக்கு ஏற்பட்ட புதுமையான ஒரு சில விடயங்களை சொல்ல ஆசைப்படுகிறேன்.
தெஹ்ரானில் இருந்து மீண்டும் லண்டன் பயணமானேன். ஆகைய விமானம் லண்டனை நெருங்கியவுடன், விமான ஓட்டி சொன்னார்; “தெஹ்ரான் விமானத்தில் பயணித்ததற்கு நன்றி – இன்னும் இருபது நிமிடங்களில் விமானம் லண்டனை சென்றடையும்.”
இதைக்கேட்டவுடன் ஈரானியப் பெண் ஒருத்தி அவளின் ஹிஜாபை கழைந்தாள். நகரத்தில் உள்ள விலைமாது போல் இறுக்கமாகவும், நெருக்கமாகவும், அணிந்திருந்தாள்.
இஸ்லாத்தின் வரம்பு அவளை நிச்சயம் சபித்திருக்கும்.
என் நரம்பு மண்டலமே செயலிழந்ததாய் உணர்ந்தேன். அல்ஹம்துலில்லாஹ்! எனது கைகள் ஹிஜாபை இறுகப்பற்றிக்கொண்டது.
இப்படியான பல மனப் போரட்டத்துகுப்பின்; அதாவது,
ஏழு நாட்களுக்குப்பின் லண்டனில் உள்ள பெரிய பள்ளியில் எனது ஷஹாதாவை மொழிந்தேன். அதுவே நான் குர்ஆனுக்கு திரும்பவேண்டிய நேரமாக இருந்தது.
குர்ஆனைத் திறந்தேன், சூரா அல்-பாதிஹா (ஆரம்ப அத்தியாயம்): அல்பாத்திஹா என்னோடு பேசுவது போல் உணர்தேன்;
“ஹலோ சாரா இவ்வளவு நாளும் எங்கே இருந்தீர்கள்,
சாந்தி, சமாதானம், பெருமகிழ்சி உள்ள மார்கத்துக்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும்,”
என அஸ் சூறா ஞானத்தின் வழி திறந்து வரவேற்றது.
வாசித்தேன் வைக்க முடியவில்லை!
“வாசிக்கத் தொடங்கினால் வைக்க முடியாது என்று யாரோ ஒருவர் ஒருமுறை சொல்லியும் இருந்தார். --- இஸ்லாத்திற்கு வருமுன் அதிகம் அப்படி உணர்ந்தும் இருக்கிறேன்.
இறைவனை நான் மறந்து, லௌகீக மயக்கத்தில் இருந்திருக்கிறேன், ஆனால், இறைவன் என்னை ஒருபோதும் கைவிடவில்லையே! அல்ஹம்துலில்லாஹ்!
எல்லோரும் அறிய விரும்பும் ஒரு கேள்வி என் மத மாற்றத்தினால் என் குடும்பம் அல்லது குழந்தைகளின் கருத்து பற்றியது.
எனது இரண்டு பெண்பிள்ளைகளும் யதார்த்தமானவர்கள். ஒருவருக்கு எட்டு வயது மற்றவருக்கு ஒன்பது வயது. மூன்று கேள்விகள் கேட்டார்கள்.
1. மமி நீங்கள் முஸ்லிமாய் இருப்பதால் இன்னும் எங்கள் மமியாக இருப்பீர்களா?
முஸ்லிமாக இருந்தால்தான் நல்ல மமியாக இருக்க முடியும்.
ஹுரே... என்று குதூகலித்தார்கள்
2. மமி மது அருந்துவீர்களா?
முஸ்லிமாக இருந்தால் ஒருபோதும் முடியாது என்றேன்.
அதற்கும் ஹுரே... என்று குதூகலித்தார்கள்.
3. நீங்கள் முஸ்லிமாக இருக்கும்போது உங்கள் மார்பு தெரிய அணிவீர்களா?
ஏன் அப்படிக் கேட்குறீர்கள் என்றேன்.
அவர்கள் சொன்னார்கள் நீங்கள் பாடசாலைக்கு வரும்போது அணியும் ஆடைகளால் மார்பு தெரிகிறது இதனால் நாங்கள் தர்மசங்கடத்துக் குள்ளாகிறோம், இன்னும், அதை வெறுக்கிறோம், நீங்கள் அதை நிறுத்தவேண்டும். என்றார்கள்.
நான் முஸ்லிம் என்றால் எல்லாம் மறைக்கப்பட்டுவிடும் என்றேன்.
“வி லவ் இஸ்லாம்” என்றார்கள்.
இம்மூன்று கேள்விகளையும் நீங்கள் உற்று நோக்கினால் அதில் பெண்மையின் அடிப்படை சுருங்கக் கூறப்பட்டுள்ளது. (அதாவது இப்படியான ஒரு கருத்தது அதனுள் அமைந்திருக்கிறது.)
கேள்வி இலக்கம் 1:
நீங்கள் நம் குடும்ப அமைப்பின் மத்தியமாக இருப்பீர்களா? எங்களுக்கு முன் உங்கள் வேலை, உங்கள் சஹாக்கள்/ நண்பர்கள், மதுச்சாலைகளை வைக்காமல் எங்களுக்கேயான ஒரு தாயாக உங்களை நம்பலாமா?
கேள்வி இலக்கம் 2:
அல்லாஹ் கூறிய நடத்தைகளின் வரம்புக்குள் நீங்கள் நிலைத்திருப்பீர்களா?
கேள்வி இலக்கம் 3:
நாணமுள்ள, மதிக்கப்படும் ஒரு இஸ்லாமியப் பெண்ணாக இருப்பீர்களா?
அல்ஹம்துலில்லாஹ்! மட்டுமே என்னால் சொல்ல வேண்டி இருக்கிறது.
“தாய் மதிக்கப்படுபவளாக இருக்க வேண்டும். ஒரு சராசரிப் பெண் உண்மையான தாயாக முடியாது” என்பதே குழந்தைகளின் விருப்பம் என்பதை இக்கேள்விகளில் இருந்து அறிய முடிகிறது.
ஒரு முஸ்லிமாக இவ்வருடத்தில் நான் கற்றுக் கொண்டது என்னவெனில்; நமக்கு ஒரு பிரச்சினை இருந்தால் அதை உங்கள் குடும்பத்திடமோ,
நண்பர்களிடமோ கூற வேண்டியதே இல்லை ---- குர்ஆன் ஓதத் தெரிந்தால் போதும் ஒவ்வொரு இரவும் ஓதுங்கள் அல்லது 10 நிமிடம் ஓதுங்கள். எவ்வொரு நாளும் உங்கள் ஈமான் உயர்ந்துகொண்டே போவதை பலப்படுவதை உணர்வீர்கள். நாம் குர்ஆனை வாசிக்க வேண்டும், அதன் வழி நடக்கவேண்டும்.
துன்பங்கள் தூரவே நிற்கும்.
என்னைப்போல் இஸ்லாத்தின் பாதையில் இல்லாமல் இஸ்லாத்திற்கு வந்தவர்களும், அல்லது நீங்கள் ஒரு முஸ்லிமாக இருந்து அதே பாதையில் இருப்பவர்களும் உங்கள் ஒவ்வொரு நாள் வாழ்கையிலும் சாந்தி, சமாதானம் நிலைபெற்று தொலைந்து போகவிடாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே! (எல்லாம் வல்லவன்)
அரபு நியூஸ் பத்திரிகையில் இருந்து பெறப்பட்டது.
ARAB NEWS - Friday 4
January 2013 - Last Update 8 January 2013 7:49 pm
Courtesy of
www.islamicbulletin.com
©2013, copyright Dharulhuda
0 comments :
Post a Comment